Published : 12 Dec 2016 11:53 AM
Last Updated : 12 Dec 2016 11:53 AM

அஸ்வின் சுழலில் 12 விக்கெட்டுகள்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் அஸ்வின் தன் அபார சுழற்பந்துவீச்சால் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இப்போட்டியில் இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

மும்பை போட்டியின் அற்புத ஆட்டம் மூலமாக, ஒரே ஆண்டில் மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

சுருண்டது இங்கிலாந்து

கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி திங்கள்கிழமை கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.

இங்கிலாந்து அணி வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. அஸ்வினின் அற்புதமான சுழற்பந்துவீச்சில் அந்த அணி சிக்கி சின்னாபின்னமானது.

ஸ்ட்ரோக் 18 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பால் இரண்டே ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நிதானமாக விளையாடி வந்த பார்ஸ்டோ 51 ரன்கள் சேர்த்தார். அவரும் அஸ்வின் பந்துவீச்சில் இலக்காகி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். ரஷீத்தும் ஆண்டர்சனும் தலா இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினிடம் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், 55.3 ஓவர்களில் 195 ரன்களை மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி படுதோல்வியைத் தழுவியது.

இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

முந்தையச் செய்திப் பதிவுகள்:

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 631 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 235 ரன்களும், ஜெயந்த் யாதவ் 104 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

முன்னதாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 142 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 136 ரன்கள் எடுத்தார்.

கோலி சாதனை

கேப்டன் விராட் கோலி 147, ஜெயந்த் யாதவ் 30 ரன்களுடன் நேற்று 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கோலி 302 பந்துகளில், 23 பவுண்டரிகளுடன் தனது 3-வது இரட்டை சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

மைக்கேல் கிளார்க், பிரண்டன் மெக்கலம், ரிக்கி பாண்டிங், பிராட்மேன் ஆகியோரும் இந்தச் சாதனையை படைத்துள்ளனர். இவர்களில் கிளார்க் 4 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

கோலி கடந்த ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 200 ரன்களும், அக்டோபர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக 211 ரன்களும் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிக்கு உறுதுணையாக விளையாடிய ஜெயந்த் யாதவ் 196 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை அடித்தார்.

இதன் மூலம் அவர் 9-ம் நிலையில் களமிறங்கி சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 176-வது ஓவரில் 600 ரன்களை எட்டியது. ஜெயந்த் யாதவ் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெம்பிங் ஆனார்.

கோலியுடன் இணைந்து ஜெயந்த் யாதவ் 8-வது விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார். சிறிது நேரத்தில் கோலி, வோக்ஸ் பந்தில் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கோலி 340 பந்துகளில், 25 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 235 ரன்கள் எடுத்தார்.

இதன்பின்னர் வந்த புவனேஷ்வர் குமார் 9 ரன்களில் நடையைக் கட்ட இந்திய அணி 182.3 ஓவர்களில் 631 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. உமேஷ் யாதவ் 7 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 47.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பேர் ஸ்டோவ் 50 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். ஜென்னிங்ஸ் 0, அலாஸ்டர் குக் 18 ரன், மொயின் அலி 0, ஜோ ரூட் 77, பென் ஸ்டோக்ஸ் 18, ஜேக் பால் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அப்போது, இந்திய அணி தரப்பில் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் ஜெயந்த் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x