

சென்னை: எதிர்வரும் 2026-ல் நடைபெற உள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை மூன்று நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. அது குறித்த விவரத்தை பார்ப்போம்.
கடந்த ஞாயிறு அன்று கத்தார் நாட்டில் நடைபெற்ற நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளது அந்த அணி.
இந்த தொடர் அரபுநாடுகளில் முதல்முறையாக நடைபெற்ற உலகக் கோப்பை தொடராக அமைந்தது. கத்தார் நாடு முதல் முறையாக தொடரை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 2026 தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
அமெரிக்காவில் 11, கனடாவில் 2 மற்றும் மெக்சிகோவில் 3 மைதானங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு குழுவுக்கு 3 அணிகள் வீதம் 16 குழுக்களாக முதல் சுற்று போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந்து 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமாம். 2026 ஜூன் மற்றும் ஜூலை வாக்கில் போட்டிகள் நடைபெறும் என தெரிகிறது.