Published : 17 Dec 2022 11:01 PM
Last Updated : 17 Dec 2022 11:01 PM

FIFA WC 2022 | மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்தது குரோஷியா

தோகா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம்பெற்றுள்ளது குரோஷியா.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மூன்றாம் இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதின.

கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டி குரோஷியா அணியின் நட்சத்திர வீரர் லூகா மோட்ரிச்சுக்கு 162வது போட்டியாக அமைந்தது. இதனால் அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஆட்டத்தின் 7வது நிமிடமே அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ க்வார்டியோல் முதல் கோல் அடித்தார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி பதில் கோல் அடிக்க ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. குறிப்பாக முதல் இந்த இரண்டு கோல்களும் தலையால் எடுக்கப்பட்டவை.

முதல் பாதிக்கு முன்னதாக, ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் கோல் அடித்து தனது அணியை 2 - 1 என முன்னிலை பெறவைத்தார். இதன்பின் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டாலும் கோல்கள் எதுவும் முடிக்கப்படவில்லை. இதனால் இறுதியில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், குரோஷியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x