தாய்நாடான ஜிம்பாப்வே அணிக்காக விளையாடும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

கேரி பேலன்ஸ் | கோப்புப்படம்
கேரி பேலன்ஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வந்த கேரி பேலன்ஸ், இனி தன் தாய்நாடான ஜிம்பாப்வே அணிக்காக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஜிம்பாப்வே கிரிக்கெட் உடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 வயதான கேரி கடந்த 2013 வாக்கில் இங்கிலாந்து அணி சார்பில் விளையாட சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2017 ஜூலை வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். இடது கை பேட்ஸ்மேன். அதன் பிறகு அணியில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,498 ரன்கள் எடுத்துள்ளார். 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

கடந்த 1989-இல் ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த கேரி, அந்த நாட்டில் பல்வேறு வயது பிரிவில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அவரது பெற்றோர் அங்கு விவசாயம் செய்து வந்துள்ளனர். 2006 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்றார். பின்னர் அதே ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து உள்ளூர் அளவில் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.

அவரது அசத்தலான ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2013 முதல் 2017 வரையில் ஆஷஸ் தொடர் உட்பட சில முக்கிய தொடர்களில் அவர் விளையாடி உள்ளார். ஆனாலும் அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள நான்கு டெஸ்ட் கிரிக்கெட் சதங்களில் இரண்டு இந்திய அணிக்கு எதிராக பெற்றவை.

கடந்த ஆண்டு சக யார்க்‌ஷயர் அணி வீரரை நிறவெறி ரீதியாக சாடியதாக அவர் மீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை இழந்தார். யார்க்‌ஷயர் அணியில் இருந்து ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில் அவர் ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச களத்தில் விளையாட உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in