Published : 13 Dec 2016 07:23 PM
Last Updated : 13 Dec 2016 07:23 PM
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பணியில் அமித் ஷா தலைமையிலான குஜராத் கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மோதேராவில் சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானம் சுமார் 49 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது. இந்த மைதானத்தை மிகப்பெரிய அளவில் புதிதாக வடிமைக்க குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த காலத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார்.
அவரது கனவு திட்டத்தை தற்போது நனவாக்கும் முயற்சியில் அமித் ஷா களமிறங்கி உள்ளார். பழைய மைதானத்தை தகர்த்து விட்டு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த பணிகளை மேற்கொள்வதற்காக எல்&டி நிறுவனத்திடம் மைதானம் ஒப்டைக்கப்பட உள்ளது. அடுத்த 2 வருடங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்து புதிய மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை உலகிலேயே பெரிய மைதானம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்தான். இந்த மைதானத்தில் 1 லட்சத்து 24 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த மைதானத்தை பின்னுக்கு தள்ளும் வகையிலேயே தற்போது அகமதாபாத்தில் புதிய மைதானம் உருவாக்கப்படுகிறது.
மோதீரா மைதானத்தில் இதுவரை 12 டெஸ்ட், 24 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு டி 20 ஆட்டம் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2014-ல் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT