Published : 03 Dec 2022 10:42 AM
Last Updated : 03 Dec 2022 10:42 AM

FIFA WC 2022 | அட்டகாசமான மேட்ச்... செர்பியாவை வீழ்த்தி நாக் - அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து!

வெற்றிக் கொண்டாடிய ஸ்விஸ் அணி

கத்தார் உலகக்கோப்பை ஏற்கெனவே பல அற்புதமான போட்டிகளை முதல் சுற்றிலேயே கண்டு விட்டது, இன்று அதிகாலை நடந்த சுவிட்ஸர்லாந்து-செர்பியா மேட்ச் முத்தாய்ப்பான ஒரு போட்டியாக அமைந்தது. இதில் சுவிட்சர்லாந்து அணி செர்பியாவை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வென்று இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அங்கு போர்ச்சுகலைச் சந்திக்கின்றது. அங்குதான் போர்ச்சுகலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது.

20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஹெர்தான் ஷகீரி முதல் கோலை அடிக்க 26வது நிமிடத்தில் செர்பியா வீரர் அலெக்சாண்டர் மித்ரோவிக் கோலைத் திருப்பி சமன் செய்தார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் டியுசான் விலாஹோவிக் 2-வது கோலை அடித்து செர்பியாவை 2-1 என்று முன்னிலை பெறச் செய்தார், ஆனால் சுவிட்சர்லாந்தின் ப்ரீல் எம்போலோ 44வது நிமிடத்தில் ஒரு கோலைத் திருப்பி சமன் செய்ய 48வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் ரெமோ ஃபிராய்லர் அடித்த கோல் வெற்றிக்கான கோலாக அமைந்தது. செர்பியா தகுதி பெற 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

ஆனால் இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்தது இரு தரப்புகளும் கடுமையாக ஃபவுல் செய்ய மொத்தம் 11 வீரர்களுக்கு மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டது. மேட்ச் ரெஃப்ரீ ஃபெர்னாண்டோ ரபாலினி உண்மையில் ஒரு இரும்பு மனிதர்தான். மைதானத்தில் செர்பியா ரசிகர்கள் தேவையற்ற கூச்சல்களை மேற்கொள்ள பொது அறிவிப்பு செய்து அவர்களை ஃபிபா எச்சரிக்க வேண்டிய நிலை ஆயிற்று. உணர்ச்சிகள் மோதும் ஆட்டமாக இது இருந்தது, இரு அணிகளின் ஆட்டத்திலும் அது பிரதிபலித்தது.

சுவிட்சர்லாந்து அணி கடந்த 7 முறை உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றும் ஒருமுறை கூட காலிறுதிக்கு முன்னேறவில்லை. நேற்றைய போட்டி ஒருவிதமான எதிரிகளுக்கு இடையிலான போட்டியாக அமைந்ததற்குக் காரணம் 2018-ம் ஆண்டு உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் ரஷ்யாவை 2-1 என்ற கோல் கணக்கில் சுவிஸ் அணி வீழ்த்தி தகுதி பெற செர்பியா வெளியேறியது, அப்போது சுவிஸ் வீரரான கொசாவோவில் பிறந்த ஷெர்தான் ஷகீரி மைதானத்தில் கோபத்துடன் அமர்ந்திருந்த செர்பிய ரசிகர்கள் பகுதிக்குச் சென்று அல்பேனியக் கொடியில் உள்ள இருதலை பருந்து போன்ற ஒரு குறியீட்டு சமிக்ஞையைக் கையால் செய்து காட்டி செர்பிய ரசிகர்களை உசுப்பி விட்டார், செர்பியாவுக்கும் கோசாவோவுக்கும் இடையே ஏற்கெனவே ‘வாய்க்கா தகராறு’ இருப்பது தெரிந்தே ஷெகீரி இவ்வாறு செய்கை செய்தது இந்த முறை செர்பியா, சுவிட்சர்லாந்தை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற ஒரு ஆத்திரத்தையும் நெருக்கடியையு செர்பிய ரசிகர்களிடத்தில் ஏற்படுத்த அது செர்பிய அணியின் மீதும் தொற்றிக் கொண்டது.

அதே ஷகீரிதான் இன்று செர்பியாவுக்கு எதிராக கத்தார் உலகக்கோப்பையிலும் ஒரு கோலை அடித்து வெறுப்பேற்றும் விதமாக சிக்னல் செய்ததோடு, மற்ற 2 கோல்களுக்கும் பெரிய அளவில் காரணமாக இருந்தார் என்பதும் செர்பிய நெருப்பில் ஊற்றிய எண்ணெயாக மாறி விட்டது. இந்த முறையும் ஷெகீரி முதல் கோலை அடித்து விட்டு செர்பிய ரசிகர்கள் முன்னால் சென்று உதட்டின் மேல் விரலை வைத்து ‘உஷ்’ என்பது போலவும் தன் ஜெர்சிக்குப் பின்னால் உள்ள தன் பெயரையும் சுட்டிக்காட்டி வெறுப்பேற்றினார்.

1990-களில் யூகோஸ்லோவியாலிருந்து பிரிந்த செர்பியா இதுவரை 4 உலகக்கோப்பை போட்டிகளுக்குத் தகுதி பெற்றும் முதல் சுற்றைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சுற்றில் இரு தோல்விகள் கண்டு கேமரூனுடன் ட்ரா செய்தது. இத்தனைக்கும் இந்த அணியில் டாப் வீரர்களான விலாஹோவிக், டாடிக், லூகா ஜோவிச் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். இவர்களுடன் மித்ரோவிச் இருக்கிறார், இவர்தான் கத்தாரில் கலக்கினார். நேற்றும் மித்ரோவிச், விலாஹோவிக் கோல்கள் மூலம் 2-1 என்று முன்னிலையே பெற்றிருந்தது செர்பியா. அதை அப்படியே பரமாரித்தாலே செர்பியா தகுதி பெற்றிருக்கும், ஆனால் சுவிட்சர்லாந்து அணியின் ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது குறிப்பாக செர்பியாவுடன் கணக்குத் தீர்க்கும் மூடில் சுவிஸ் வீர்ர் ஷெகீரி ஆடிய ஆக்ரோஷ ஆட்டமும் செர்பியாவின் வெளியேற்றத்திற்குக் காரணமாயின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x