FIFA WC 2022 | 2.22 நிமிட இடைவெளியில் 2 கோல்கள்; ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான்: வெளியேறியது ஜெர்மனி

ஜப்பான் வீரர் தனகா
ஜப்பான் வீரர் தனகா
Updated on
1 min read

அல் ரய்யான்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜப்பான் அணி. அதனால் முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளது ஜெர்மனி அணி.

குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் தங்களது கடைசி குரூப் போட்டியில் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஜப்பான் அணிக்கு இருந்தது. இந்த போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்த போட்டி கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

ஆனால், இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வெறும் 2.22 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தியது ஜப்பான். அதில் இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட கோல் ‘அவே’ லைனை கடந்தது போல இருந்தது. அதை வீடியோ மூலம் பார்த்து கோல் என்று உறுதி செய்தார் நடுவர். ஆனாலும் ரசிகர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். அதன் பிறகு ஸ்பெயின் அணியின் முயற்சிகள் அனைத்தும் வீணானது.

இந்த போட்டியை ஸ்பெயின் டிரா செய்திருந்தால் இதே பிரிவில் உள்ள ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும். அது நடக்காத காரணத்தால் அந்த அணி வெளியேறி உள்ளது. குரூப் ‘இ’ பிரிவில் முதலிடம் பிடித்த ஜப்பான் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த ஸ்பெயின் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஸ்பெயின் அணி அதிக கோல்கள் பதிவு செய்த காரணத்தால் ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியுள்ள. கோஸ்டாரிக்கா 2 போட்டிகளில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in