Published : 01 Dec 2022 12:38 AM
Last Updated : 01 Dec 2022 12:38 AM

ஒருநாள் கிரிக்கெட்டில் சாம்சனின் சராசரி 66; ஆனாலும் பெஞ்சில் உள்ளார் - இந்திய அணியை சாடிய சசி தரூர்

சஞ்சு சாம்சன் & சசி தரூர் | கோப்புப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆடும் லெவனில் மீண்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடி உள்ளார் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சசி தரூர்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார்.

28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார் கேரளாவை சேர்ந்த சஞ்சு. ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு கிடைத்தாலும் ஆடும் லெவனில் கிடைப்பதில் சவாலாக உள்ளது.

“மீண்டும் மற்றொரு முறை ரன் சேர்க்க தவறியுள்ளார் பந்த். அவருக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து சில காலம் ஓய்வு தேவை. மறுபக்கம் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அவரது பேட்டிங் திறனை வெளிப்படுத்த வேண்டி உள்ளது.

‘பந்த் நான்காவது பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் அவருக்கு ஆதரவு கொடுப்பது முக்கியம்’ என விவிஎஸ் லஷ்மண் சொல்லி இருந்தார். அவர் ஃபார்மில் இல்லாத சிறந்த வீரர். 11 இன்னிங்ஸில் 10 முறை பெயிலியர். ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் சராசரி 66. கடைசி 5 போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார்” என தரூர் ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x