

கத்தார்: கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து அசத்தினார். அதனால் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. எனினும், இதற்கு பதிலடியாக 68வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடிக்க ஆட்டம் சூடு பிடித்தது.
இரு 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டிய நிலையில் 86 நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே கோல் அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அவரின் அசத்தலான ஆட்டத்தால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16ல் நுழைந்த முதல் அணியாக பிரான்ஸ் மாறியது.