

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாமல் உடல்தகுதி பெற்றவராக எப்படி கருதப்படுகிறார் என்று முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது நியூஸிலாந்துக்கு எதிராக கடைசியாக ஒருநாள் போட்டியில் ஆடிய தோனி சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஜனவரி 15-ம் தேதி மீண்டும் சர்வதேச போட்டியில் ஆடுகிறார்.
இடையில் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் அவர் ஆடவில்லை. மற்ற வீரர்கள் தங்கள் உடல்தகுதியை உள்நாட்டுப் போட்டிகளில் ஆடி நிரூபித்தே அணியில் நுழைய முடியும் போது தோனி எப்படி நேரடியாக உடற்தகுதி பெறுபவராகிறார் என்று முக்கியமான கேள்வியை திலிப் வெங்சர்க்கார் எழுப்பியுள்ளார்.
மும்பை மிட் டே பத்திரிகையில் அவர் இது பற்றி கேள்வி எழுப்பும்போது, “தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ரஞ்சி போட்டிகளிலும அவர் ஆடுவதில்லை. அவர் எப்படி தன் உடற்தகுதியை நிரூபிக்கிறார்?
எந்தவொரு வீரரும் அடிக்கடி கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தால்தான் சர்வதேச போட்டிகளுக்கு உடலளவில் தயாராக இருக்க முடியும். தோனி இதனைச் செய்யாமல் இருப்பது முரணாகத் தெரிகிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல், புவனேஷ் குமார், மொகமது ஷமி ஆகியோர் உட்பட பலரும் உடற்தகுதியை உள்நாட்டு போட்டிகளில் ஆடியே நிரூபித்து மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.