Published : 21 Jul 2014 10:55 AM
Last Updated : 21 Jul 2014 10:55 AM
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு 319 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. முன்னதாக இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் 103.1 ஓவர்களில் 342 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 295 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் சேர்த்தன.
முதல் இன்னிங்ஸில் 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 63 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 59, கேப்டன் தோனி 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
4-வது நாளான ஞாயிற்றுக் கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் விஜயும், தோனியும் நிதானமாக ஆடினர். 4-வது நாள் ஆட்டத்தின் 13-வது ஓவரை வீசிய பிளெங்கட் தோனியை வீழ்த்தினார். 86 பந்துகளைச் சந்தித்த தோனி 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்தார். தோனி-விஜய் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது.
முரளி விஜய் 95
இதையடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி டக்அவுட்டாக, முரளி விஜயுடன் இணைந்தார் ஜடேஜா. முரளி விஜய் நிதானமாக ஆட, ரவீந்திர ஜடேஜா பவுண்டரிகளை விரட்டி அதிரடியாக ரன் சேர்த்தார். முரளி விஜய் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிருஷ்டவசமாக 95 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அடுத்தடுத்த போட்டி களில் மட்டுமின்றி, லார்ட் ஸிலும் சதமடிக்கும் வாய்ப் பையும் இழந்தார் விஜய். இதைத்தொடர்ந்து ஜடேஜாவுடன் இணைந்தார் புவனேஸ்வர் குமார். இந்த முறையும் இங்கிலாந்து பௌலர்களை சோதித்தார் புவனேஸ்வர் குமார். அவர் 2 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை ஜோ ரூட் கோட்டைவிட, பின்னர் விஸ்வரூபமெடுத்தார்.
ஜடேஜா அதிரடி
மறுமுனையில் ஜடேஜா பவுண்டரிகளை விளாச, உணவு இடைவேளையின்போது 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ஜடேஜா 42 பந்துகளில் அரைசதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர் 57 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
புவனேஸ்வர் அரைசதம்
பின்னர் வந்த முகமது சமி டக் அவுட்டாக, இஷாந்த் சர்மா களம்புகுந்தார். இதனிடையே 65 பந்துகளில் அரைசதம் கண்ட புவனேஸ்வர் குமார் 71 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியாவின் 2-வது இன்னிங்ஸ் 103.1 ஓவர்களில் 342 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. இஷாந்த் சர்மா ரன் ஏதுமின்றி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ், பிளெங்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த் தினர்.
இதையடுத்து 319 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. ராப்ஸன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது தாக்குப்பிடித்த குக் மற்றும் பாலன்ஸ் ஜோடியை சாமி உடைத்தார். 27 ரன்களுக்கு பாலன்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த இயன் பெல், ரன் ஏதுமின்றி இஷாந்த் சர்மாவின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்து வெளியேறினார்.
குக் 23 ரன்களுக்கு ஷர்மாவின் பந்தில் ஆட்டமிழக்க, ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அலி 15 ரன்களுடனும், ரூட் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT