

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை சேர்த்தது. இதில் சூர்யகுமார் யாதவ் சதமடித்து அசத்தினார்.
மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 36 ரன்களைச் சேர்த்தார். ரிஷப் பண்ட் (6), ஷ்ரேயாஸ் ஐயர் (13), பாண்ட்யா (13) ரன்களில் விக்கெட்டாகி வெளியேறினர். தீபக் ஹூடா, வாஷிங்கடன் சுந்தர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதமடிக்க இந்திய அணி,20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கி விளையாடி வருகிறது.