

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது இந்தியா. இந்த வெற்றி இந்திய அணிக்கு அவசியமான ஒன்று. இந்நிலையில், இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்த ஃபீல்டிங் தவறை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டியுள்ளது வங்கதேச அணி.
இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டது. அதனால் 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. இருந்தும் 145 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.
“நிச்சயமாக மழைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது மைதானத்தில் இருந்த ஈரப்பதம் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தப் போட்டியில் ஒரு போலியான த்ரோ இருந்தது. அதன்மூலம் எங்களுக்கு 5 ரன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என வங்கதேச வீரர் நூருல் ஹசன் தெரிவித்திருந்தார்.
அவர் குறிப்பிட்டு சொல்லும் அந்தச் சம்பவம், வங்கதேச அணி பேட் செய்தபோது 7-வது ஓவரில் நடைபெற்று இருந்தது. டீப்பில் இருந்து பந்தை அர்ஷ்தீப், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வாச பாஸ் செய்தார். பந்து பாயிண்ட் ஃபீல்டராக இருந்த கோலியை கடந்து சென்றது. அப்போதுதான் போலி த்ரோவை ஸ்டம்புகளை நோக்கி செய்திருந்தார் அவர். இருந்தும் அந்த குறிப்பிட்ட பந்தில் 2 ரன்கள் எடுத்தது வங்கதேசம். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதும் கோலி தான்.
அதென்ன போலி த்ரோ? - சர்வதே கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதி 41.5-இன்படி களத்தில் பந்து வீசும் அணி பேட் செய்து கொண்டிருப்பவர்களிடையே கவனச் சிதறலை ஏற்படுத்துவது, ஏமாற்றுவது அல்லது தடுப்பது போன்ற வேலைகளை செய்வது தவறு. அதனை நடுவர்கள் கவனித்தால் அந்த பந்தை டெட் பாலாக அறிவித்து, பேட் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கொடுக்கலாம். கோலி, பந்தை எடுக்காமல் வெறும் கையால் ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்வது போல சைகை செய்திருந்தார். அது தான் இப்போது சர்ச்சைக்குள் ஆகியுள்ளது.