Published : 02 Nov 2022 06:18 PM
Last Updated : 02 Nov 2022 06:18 PM

T20 WC | ட்விஸ்ட் கொடுத்த மழை - வங்கதேசத்தை போராடி வீழ்த்தியது இந்தியா

விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடி மகிழும் இந்திய வீரர்கள்

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி பேட் செய்தபோது குறுக்கிட்ட மழை காரணமாக ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதோடு அந்த மழைதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்காக கே.எல்.ராகுல், கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. அந்த அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வங்கதேசம் வெற்றி பெறலாம் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 66 ரன்கள் எடுத்திருந்த காரணத்தால் 9 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்தால் வங்கதேசம் வெற்றி பெறலாம் என்ற நிலை. அந்த அணியின் வசம் 10 விக்கெட்டுகள் இருந்தது.

இப்படி அனைத்தும் வங்கதேசத்திற்கு சாதகமாக இருந்தது. மழைக்கு முன்பாக லிட்டன் தாஸ், விக்கெட்டை வீழ்த்த போராடியது இந்தியா. ஏனெனில் அவர் மட்டுமே அப்போது 26 பந்துகளில் 59 ரன்களை குவித்திருந்தார். மழைக்கு பின்னர் மீண்டும் போட்டி தொடங்கிய முதல் ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் 60 ரன்கள் எடுத்திருந்தார். கே.எல்.ராகுல் அபாரமாக பந்தை த்ரோ செய்து டைரக்ட் ஹிட் முறையில் ஸ்டம்புகளை தகர்த்து அவரை வெளியேற்றினார்.

அங்கிருந்து வங்கதேச அணி ஒவ்வொரு விக்கெட்டாக இழக்க தொடங்கியது. ஷான்டோ, ஹுசைன், ஷகிப், யாஸீர் அலி, எம் ஹுசைன் போன்றவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதை பார்க்க அவர்கள் இந்திய ஃபீல்டர்களுக்கு கேட்ச் பிராக்டீஸ் கொடுத்தது போல இருந்தது.

வெற்றிக்கோட்டை நெருங்கிய வங்கதேசம்: இருந்தும் கடைசி சில ஓவர்களின்போது டஸ்கின் அகமது மற்றும் விக்கெட் கீப்பர் ஹசன் என இருவரும் இறுதி வரை விடாமல் இலக்கை துரத்தினர். 15-வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து மிரட்டி இருந்தார் டஸ்கின். கடைசி ஓவரில் 20 ரன்கள் வங்கதேசத்திற்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை அர்ஷ்தீப் வீசி இருந்தார். முதல் பந்தில் சிங்கிள். அடுத்த பந்தில் சிக்ஸர். அதற்கடுத்த பந்தில் டாட். நான்காவது பந்தில் 2 ரன்கள் எடுத்தது வங்கதேசம். 2 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த அணி இருந்தது. ஐந்தாவது பந்தில் பவுண்டரி எடுத்தார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹசன். கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸர் அடித்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் நிலை. ஆனால் அந்த பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தது வங்கதேசம். 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்தது அந்த அணி. அதனால் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் விக்கெட்டுகள், பாண்டியா 2 விக்கெட்டுகள், ஷமி 1 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 1 தோல்வியுடன் சூப்பர் 12 குரூப்-2இல் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா. வரும் ஞாயிறு அன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. இந்த தோல்வி வங்கதேச அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வருத்தமடைய செய்துள்ளது. அதனை நேரலை ஒளிபரப்பில் பார்க்க முடிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x