Published : 30 Oct 2022 09:17 PM
Last Updated : 30 Oct 2022 09:17 PM

T20 WC | எய்டன் மார்க்ரம்; டேவிட் மில்லர் அதிரடி - இந்தியாவை தோற்கடித்தது தென்னாப்பிரிக்கா 

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா - கே.எல்.ராகுல் இணை ஆளுக்கொரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினர். எனினும், இருவரும் சொல்லிவைத்தார் போல லுங்கி இங்கிடி வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டாக்கி நடையை கட்டினர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி - சூர்யகுமார் இணை பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்கவில்லை.

கடந்த சில ஆட்டங்களில் அதிரடி காட்டி வந்த விராட் கோலி 12 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரன் எதுவும் எடுக்காமல் தீபக் ஹீடாவும் வெளியேறினார். இதனால் 8 ஓவர் முடிவில் 47 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது இந்திய அணி. அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களில் கிளம்ப, தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 6 ரன்களை எடுத்து வெளியேறினார்.

அடுத்தடுத்து வந்த அஸ்வின, ஷமி இருவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 133 ரன்களை சேர்த்தது இந்திய அணி. தென்னாப்பிரிக்கா தரப்பில் லூங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும்,வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும், அர்னிச் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் குவின்டின் டிகாக் - டெம்பா பஹூமா இணையை முதல் ஓவரில் அர்ஷிப் சிங் பிரித்தார். டிகாக் 1 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த ரிலீ ரோசோவ் ரன் எதுவும் எடுக்காமலும் மைதானத்தை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் டெம்பா பஹூமாவும் விக்கெட்டாக 6 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா 24 ரன்களை சேர்த்தது. அடுத்து வந்த ஏய்டன் மார்க்ரம் 41 பந்துகளில் 52 ரன்களை சேர்த்தார். அதேபோல, டேவிட் மில்லர் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், சமி, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x