Published : 23 Oct 2022 11:56 AM
Last Updated : 23 Oct 2022 11:56 AM

இந்தியா  – பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிடாது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

மெல்பர்ன்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மெல்பர்ன் நகரில் இன்று மழை பெய்ய 80 முதல் 90 சதவீத வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) இன்றைய போட்டியின்போது மழைக்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,இன்றைய இந்தியா–பாகிஸ்தான் போட்டியின்போது மழையின் குறுக்கீடு இருக்காது. போட்டியின் 2ஆம் பாதியில் மழை தாக்கம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்று பதிவிட்டுள்ளார். இது தீபாவளியைவிட ஆர்வமாக போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

ஐசிசி நடத்தும் தொடர்களில் தோனி தலைமையிலும் அதற்கு முன்னரும் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இல்லை. இதற்கு கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் முடிவு கட்டப்பட்டிருந்தது. இந்தியாவுக்கு எதிராக ஷாகீன் ஷா அப்ரிடியின் மிரட்டலான தொடக்க ஓவர் பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி முதன்முறையாக வெற்றி பெற்றது.

37 வருடங்களுக்குப் பிறகு.. இந்நிலையில் 37 வருடம் 6 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு நடைபெற்ற பென்சன் & ஹெட்ஜஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மெல்பர்ன் மைதானத்தில் மோதியிருந்தன. இதில் இந்தியா வென்று பட்டம் வென்றிருந்தது. தற்போது அதே மைதானத்தில் இரு அணிகள் மோதவுள்ளன.

அணிகளின் பலம் என்ன? இந்திய அணியானது நட்சத்திரவீரர்கள் நிறைந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. டாப் ஆர்டரில் முதல் 3 இடங்களில் அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி உள்ளனர். சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நடுவரிசையில் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூஸிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு டி 20 தொடரை வென்ற நிலையில் உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது. பேட்டிங்கில் டாப் ஆர்டரில் மொகமது ரிஸ்வான், பாபர் அஸம் ஜோடி அணியின் அச்சாரமாக உள்ளது. அதிலும் இலக்கை துரத்தும் போது இந்த ஜோடி எதிரணியின் பந்து வீச்சை பலமுறை சிதைத்துள்ளது.

ஷான் மசூத், பஹர் ஸமான், ஹைதர் அலி, இப்திகார் அகமது, ஆசிப் அலி ஆகியோரை உள்ளடக்கிய நடுவரிசை பேட்டிங் சற்று அனுபவம் இல்லாதது மட்டுமே பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர்களான ஷதப் கான், மொகமது நவாஸ் ஆகியோர் பின்கள பேட்டிங்கில் கைகொடுப்பது கூடுதல் பலம் சேர்ப்பதாக உள்ளது.

ஷாகீன் ஷா அப்ரிடி அணிக்கு திரும்பி இருப்பது வேகப்பந்து வீச்சுதுறை மேலும் பலமாக்கி உள்ளது. கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் முதல் இரு ஓவர்களிலேயே இந்திய அணியை முடக்கிக் போட்டிருந்தார் ஷாகீன் ஷா அப்ரிடி. இம்முறையும் அவரிடம் இருந்து அதே செயல்திறனை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஷாகீன் ஷா அப்ரிடியுடன் நசீம் ஷா, ஹரிஸ் ரஃவுப், மொகமது ஹஸ்னைன் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். இவர்கள் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x