Published : 13 Oct 2022 05:34 PM
Last Updated : 13 Oct 2022 05:34 PM

மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை

கோப்புப்படம்

சில்ஹெட்: வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக பலப்பரீட்சை செய்ய உள்ளது. இரு அணிகளும் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெற்றது.

அதில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றன. இந்தியா, தாய்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது.

இந்தியா எளிதாக வெற்றி: முதல் அரையிறுதியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் விளையாடின. அதில் இந்திய அணி முதலில் பேட் செய்து 148 ரன்களை குவித்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் வெறும் 74 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன் மூலம் இந்தியா 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இலங்கை த்ரில் வெற்றி: இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் இலங்கை முதலில் பேட் செய்து 122 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய பாகிஸ்தான் அணி 121 ரன்கள் எடுத்தது. ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிப் பெற்றுள்ளது.

இறுதிப் போட்டி: இரு அணிகளும் வரும் 15-ம் தேதி சில்ஹெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்தத் தொடரில் இரு அணிகளும் முதல் சுற்றில் நேருக்கு நேர் விளையாடி இருந்தன. அதில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x