

பெங்களூரு: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான சக்ஸஸ் ரகசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பகிர்ந்துள்ளார். கடந்த 2007 வாக்கில் நடைபெற்ற முதல் டி20 தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனமான ஷேகா ஹாரி நிறுவனத்தின் நிகழ்வில் தோனி பங்கேற்றார். டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து அப்போது பேசிய தோனி இதனை சொல்லி இருந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டி வரும் 23-ம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டி நாளன்றும் இந்திய அணி வீரர்கள் தங்களது திறனை 80 முதல் 90 சதவீதம் வரை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள தோனி, அதே நேரத்தில் எதிரணியின் பவர் ஹீட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு அந்த நாள் மோசமானதாக அமைய வேண்டும் என்றும் இது நடந்தால் இந்திய அணிக்கு வெற்றிதான் என்றும் தெரிவித்துள்ளார்.