Published : 31 Jul 2014 10:00 AM
Last Updated : 31 Jul 2014 10:00 AM

தேசிய கல்லூரிகள் இடையிலான கூடைப்பந்து நாளை தொடக்கம்

மகேந்திரன் நினைவு ஸ்போர்ட் கிளப் சார்பில் அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல்முறையாக நடத்தப்படும் இந்தப் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தின் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி நிலை-1, நிலை-2 என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. நிலை-1 பிரிவில் தமிழகத்தில் இருந்து ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எம்.சி.சி. (பி), மயிலாடுதுறை ஏவிசி, சத்யாபாமா பல்கலை., டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி, ஜி.ஆர்.டி.கல்லூரி, எம்.சி.சி. (ஏ), ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி, எஸ்.ஆர்.எம்.பல்கலை., ஹிந்துஸ்தான் பல்கலை., லயோலா கல்லூரி, அண்ணா பல்கலை. ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நிலை-2 பிரிவில் விளையாடத் தகுதி பெறும். இந்தப் பிரிவில் லூதியானா கலைக்கல்லூரி, டெல்லி கிரோரிமல் கல்லூரி, பெங்களூர் ஜெயின் பல்கலை., திரிச்சூர் கேரள வர்மா கல்லூரி ஆகிய அணிகள் மற்றும் நிலை-1 பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் என மொத்தம் 8 அணிகள் மோதும்.

இந்தப் போட்டி லீக் மற்றும் சூப்பர் லீக் அடிப்படையில் நடைபெறும். வெற்றிபெறும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். போட்டியை சென்னை சுங்கத்துறை ஆணையர் (ஏற்றுமதி) மயங்க் குமார் தொடங்கிவைக்கிறார். போட்டியின் இயக்குநர்களாக எம்.எஸ்.நாசர், பி.ஜி.பரணிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல் சென்னை கூடைப்பந்து சங்க செயலர் நிஸ்ஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x