T20 WC | பும்ரா இன்னும் தொடரில் இருந்து விலகவில்லை: கங்குலி புதிய தகவல்

பும்ரா மற்றும் இந்திய வீரர்கள்.
பும்ரா மற்றும் இந்திய வீரர்கள்.
Updated on
1 min read

கொல்கத்தா: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இன்னும் விலகவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை டிஜிட்டல் சேனல் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாக தகவல்.

முதுகு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார் பும்ரா. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். அவரை அங்குள்ள மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ராவுக்கு மாற்றாக முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

“பும்ரா, இன்னும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகவில்லை. அவர் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் எடுக்கப்படும்” என கங்குலி தெரிவித்துள்ளார்.

வரும் 6-ம் தேதி வியாழன் அன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட அல்லது. அங்கு இந்திய அணி தொடருக்கான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. அக்டோபர் 16-ம் தேதி உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in