Published : 28 Sep 2022 10:18 PM
Last Updated : 28 Sep 2022 10:18 PM

IND vs SA | சூர்யகுமார், கேஎல் ராகுல் அடுத்தடுத்து அரைசதம் - தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

திருவனந்தபுரம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா முதல் விக்கெட்டாக ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதேபோல், விராட் கோலியும் வந்த வேகத்தில் 3 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். இப்படி முதல்வரிசை வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக, இந்திய அணி சற்று தடுமாறியது. எனினும், கேஎல் ராகுல் உடன் கூட்டணி அமைத்தார் சூர்யகுமார் யாதவ். மெதுவாக அணியை மீட்டெடுத்த இந்தக் கூட்டணி இறுதி ஓவர்கள் நெருங்க நெருங்க அதிரடியை வெளிப்படுத்தியது.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தவர்கள், பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக 16.3வது பந்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்த, அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அரைசதம் அடித்தார் கேஎல் ராகுல். இதனால் இரண்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது இந்திய அணி. கேஎல் ராகுல் 51 ரன்களும், சூர்யா 50 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்: டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. தென்னாப்பிரிக்க அணி பவர்பிளே ஓவர்களின் முதல் மூன்று ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. டெம்பா பவுமா, டிகாக், ரிலே ரோஸ்சோவ், டேவிட் மில்லர், ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் வரிசையாக 10 பந்துகளில் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர். ஒரே ஓவரில் அர்ஷ்தீப் சிங், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் டிகாக்கை தவிர மற்ற அனைவரும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.

பவர்பிளே ஓவர்களின் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. 7 முதல் 15 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே அந்த அணி இழந்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. அதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா. அதிகபட்சமாக கேஷவ் மகாராஜ் 41 ரன்களும், மார்க்ரம் 25 ரன்களும், பார்னெல் 24 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகள், தீபக் சஹார் 2 விக்கெட்டுகள், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகள் மற்றும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x