Published : 26 Sep 2022 10:04 PM
Last Updated : 26 Sep 2022 10:04 PM

தேசிய விளையாட்டுப் போட்டிகள் | வாள் வீச்சில் ஹாட்-ட்ரிக் தங்கத்தை குறிவைக்கும் பவானி தேவி

பவானி தேவி (கோப்புப்படம்).

அடுத்த சில நாட்களில் குஜராத் மாநிலத்தில் தொடங்கவுள்ள 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளார் தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. இதற்காக அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து குஜராத் வர உள்ளார். இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவதன் அவசியத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

29 வயதான அவர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியா சார்பில் விளையாடி இருந்தார்.

“தேசிய அளவிலான இந்த தொடர் எனக்கு மிக முக்கியமானது. நான் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் வாள்வீச்சு விளையாட்டு பெரிய அளவில் மாற்றத்தை கண்டுள்ளது என நினைக்கிறேன். இந்த முறை இந்த தொடர் வித்தியாசமானதாக இருக்கும். இதில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.

2011 மற்றும் 2015 தொடரில் நான் பிற விளையாட்டுப் போட்டிகளையும் பார்த்தேன். சிறந்த விளையாட்டு வீரர்களுடன் பேசும் வாய்ப்பும் அமைந்தது. எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக இந்த போட்டி எனது ஆட்டத்தை மதிப்பீடு செய்ய உதவும் என கருதுகிறேன். தேசிய அளவிலான போட்டிகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. எனது ஆட்டமுறை (டெக்னிக்) மற்றும் மன ஆரோக்கியத்தை செம்மைப்படுத்தும் தொடர் இது தான். இதற்காக எனது பயிற்சியாளருடன் இணைந்து திட்டமிட்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சார்பில் அவர் பங்கேற்று விளையாட உள்ளார். 2011 மற்றும் 2015 தேசிய விளையாட்டில் தொடரில் அவர் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x