Published : 25 Sep 2022 10:42 PM
Last Updated : 25 Sep 2022 10:42 PM

IND vs AUS | சூர்யகுமார் யாதவ் & கோலி தரமான கூட்டணி: தொடரை வென்றது இந்தியா

சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி.

ஹைதராபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. மூன்றாவது டி20 போட்டியில் 187 ரன்கள் இலக்கை விரட்டி கோப்பையை வென்றுள்ளது இந்தியா. இந்த வெற்றி உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக சிறப்பானதொரு வெற்றியாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை 1-1 என சமன் செய்தன. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று (செப்டம்பர் 25) ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ராகுல் முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். கேப்டன் ரோகித் 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 62 பந்துகளில் 104 ரன்கள் எடுத்திருந்தனர்.

சூர்யகுமார் யாதவ், 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். தலா 5 பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் இதில் அடங்கும். கோலி தனது 33-வது டி20 கிரிக்கெட் அரை சதத்தை பதிவு செய்தார்.

கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கோலி மற்றும் பாண்டியா இருந்தனர். இறுதி ஓவர் வரை ஆட்டம் சென்றது. கடைசி ஓவரை டேனியல் சாம்ஸ் வீசி இருந்தார். முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார் கோலி. அதன் மூலம் 5 பந்துகளில் 5 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் இரண்டாவது பந்தில் கோலி அவுட்டானார். அவர் 47 பந்துகளில் 63 ரன்களை எடுத்திருந்தார்.

தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்திருந்தார். ஐந்தாவது பந்தில் பவுண்டரி விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஹர்திக். 19.5 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஹர்திக் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணி சார்பில் களம் இறங்கி இருந்தனர். முதல் ஐந்து ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்களை குவித்தது அந்த அணி.

குறிப்பாக கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். 19 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார் அவர். இந்திய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிவேக அரை சதம் இது. ஃபின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்திருந்தனர். பின்னர் வந்த இங்க்லீஸ் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த மேத்யூ வேட், 1 ரன் எடுத்து அவுட்டானார்.

கடைசி ஓவர் வரை பேட் செய்த டீம் டேவிட், 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆஸ்திரேலிய அணிக்காக அவர் பதிவு செய்துள்ள முதல் அரை சதம் இது. டேனியல் சாம்ஸ், 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்தியா சார்பில் அக்சர் படேல் (3 விக்கெட்), புவனேஷ்வர், சஹால் மற்றும் ஹர்ஷல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x