Published : 23 Sep 2022 05:56 AM
Last Updated : 23 Sep 2022 05:56 AM

ஜூலியஸ் பேர் கோப்பை செஸ்: கால் இறுதி சுற்றில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா

நியூயார்க்: ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இணையதளம் வாயிலாக நடைபெற்று வந்த இந்த தொடரின் முதற்கட்ட போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். 15 சுற்றுகள் கொண்ட இந்தத் போட்டியில் 4-வது நாளான நேற்று கடைசி 3 சுற்றுகள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தார். ஒரு ஆட்டத்தை டிரா செய்தார். ஒட்டுமொத்தமாக 15 சுற்றில் அர்ஜூன் எரிகைசி 7 வெற்றி, 4 டிரா, 4 தோல்விகளுடன் 25 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.

பிரக்ஞானந்தா தலா ஒரு வெற்றி, தோல்வி, டிராவை பதிவுசெய்தார். 15 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 5 வெற்றி, 8 டிரா, 2 தோல்விகளுடன் 23 புள்ளிகள் பெற்று 4-வது இடம் பிடித்தார்.

உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் கடைசி 3 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தினார். 10 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 34 புள்ளிகள் குவித்து கார்ல்சன் முதலிடம் பிடித்தார்.

கால் இறுதி சுற்றில் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் யோ கிறிஸ்டோபரை எதிர்கொள்கிறார். பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை சந்திக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x