Published : 21 Sep 2022 05:50 AM
Last Updated : 21 Sep 2022 05:50 AM

2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல் - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் அணி

கேன்டர்பரி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என இழந்தது.இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் கேன்டர்பரி நகரில் இன்று மாலை 6 மணி அளவில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் ஹர்மான்பீரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியிருந்தது. பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மான்பிரீத் கவுர், யாஷ்டிகா பாட்டியா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா கடந்த 10 ஆட்டங்களில் ஒரு முறைகூட அரை சதத்தை எட்டவில்லை. அவர், பார்முக்கு திரும்பினால் அணியின் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். பந்து வீச்சில் 39 வயதான ஜூலன் கோஸ்வாமி முதல் ஆட்டத்தில் 10 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். அவர், இந்தத் தொடருடன் ஓய்வு பெறுவதால் மீண்டும் ஒரு முறை சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.

கடைசியாக இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என வென்றிருந்தது. அப்போது அஞ்சும் சோப்ரா தலா ஒரு சதமும், அரை சதமும் அடித்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் அடுத்து நடைபெற உள்ள போட்டிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x