

பெல்கிரேடு: செர்பியாவின் பெல்கிரேடு நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, பியூர்டோ ரிக்கோவின் செபாஸ்டியன் சி ரிவேராவை எதிர்த்து விளையாடினார். இதில்பஜ்ரங் புனியா 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பஜ்ரங் புனியா பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும். முதற்கு முன்னர் 2013-ம் ஆண்டு வெண்கலப் பதக்கமும், 2018-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும், 2019-ம் ஆண்டு வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார் பஜ்ரங் புனியா.
இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 4 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பஜ்ரங் புனியா.
பெல்கிரேடு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் 30 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. ஆனால் பெரிய அளவிலான செயல்திறன் இன்னும் வெளிப்படவில்லை. இதுவரை2 வெண்கலப் பதக்கம் மட்டுமேஇந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மகளிர் பிரிவில் சில தினங்களுக்கு முன்னர் வினேஷ் போகத்,வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.