“24 ஆண்டுகளை 24 மணி நேரம் போல உணர்கிறேன்” - ஓய்வை அறிவித்தார் ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர்.
ரோஜர் ஃபெடரர்.
Updated on
1 min read

டென்னிஸ் விளையாட்டு உலகத்தின் ஜாம்பவான்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெகு விரைவில் தொடங்க உள்ள லேவர் கோப்பை (Laver Cup) டென்னிஸ் தொடர்தான் அவரது கடைசி தொடராக இருக்கும் எனத் தெரிகிறது. அவருக்கு வயது 41.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ரோஜர் ஃபெடரர். கடந்த 1998 வாக்கில் டென்னிஸ் உலகில் அறிமுகமானார். அவர் முதன்முதலில் சர்வதேச அளவிலான தொடரில் விளையாடியது அவரது தாய்நாட்டில்தான். அங்கிருந்து தொடங்கிய அவரது டென்னிஸ் ராக்கெட்டின் (பேட்) அரசாட்சியை யாராலும் அணை போட்டு தடுக்க முடியவில்லை.

ஏடிபி (ATP) ரேங்கிங் தரவரிசையில் சுமார் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர். அதில் தொடர்ச்சியாக 237 வாரங்கள் முதலிடத்தை தனக்கானதாக சீல் செய்தவர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மட்டுமே 20 முறை சாம்பியன் பட்டம் வென்றுவர். அதில் விம்பிள்டன் அரங்கில் மட்டும் 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றார்.

இப்படியாக டென்னிஸ் உலகில் அவர் எட்டாத உயரங்களே இல்லை. இருந்தபோதும் காயங்கள் அவரை ரொம்பவே வருந்தச் செய்தன. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பிரதான டென்னிஸ் தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்தார். இந்நிலையில்தான் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார். “24 ஆண்டுகளை 24 மணி நேரம் போல உணர்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in