Published : 15 Sep 2022 07:35 AM
Last Updated : 15 Sep 2022 07:35 AM

இங்கிலாந்துக்கு எதிராக மந்தனா அதிரடியில் இந்தியா வெற்றி

டெர்பி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இரு அணிகளும் 2-வது ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு டெர்பி மைதானத்தில் மோதின.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. ஃப்ரீயா கெம்ப் 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், மயா பவுச்சர் 26 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் சினே ராணா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

143 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணியானது 16.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 53 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 79 ரன்களும் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 22 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ஷபாலி வர்மா 20, தயாளன் ஹேமலதா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 பந்துகள் மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. கடைசி ஆட்டம் இன்று இரவு 11 மணிக்கு பிரிஸ்டல் நகரில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x