Published : 12 Apr 2014 11:54 AM
Last Updated : 12 Apr 2014 11:54 AM

டெக்சாஸ் ஓபன்: காலிறுதியில் தீபிகா பலிக்கல்

அமெரிக்காவின் ஹஸ்டன் நகரில் நடைபெற்று வரும் டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தீபிகா பலிக்கல் தனது முதல் சுற்றில் 12-10, 11-8, 11-5 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் தகுதி நிலை வீராங்கனையான டோனா உர்குஹர்ட்டை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார். தீபிகா பலிக்கல் தனது காலிறுதியில் கயானாவின் நிக்கோலெட் பெர்னாண்டஸை சந்திக்கிறார். நிக்கோலெட் தனது முதல் சுற்றில் 12-10, 10-12, 11-5, 8-11, 11-8 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த ஹாங்காங்கின் அன்னே அவுவைத் தோற்கடித்தார்.

வெற்றி குறித்துப் பேசிய பலிக்கல், “இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் நான் நன்றாக விளையாடினேன். எனவே காலிறுதியில் எனது ஆட்ட உத்தியில் பெரிய அளவில் மாற்றம் செய்ய விரும்பவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு நிக்கோலெட்டுடன் மோதியிருக்கிறேன். அவருடைய ஆட்டத்திறனில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவருடனான காலிறுதி ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். 3 ஆண்டுகளுக்கு முன்பு நிக்கோலெட்டுடன் விளையாடிய தீபிகா பலிக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார். சர்வதேச தரவரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் ஜோஷ்னா 7-11, 5-11, 5-11 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ரஹேல் கிரின்ஹாமிடம் தோல்வி கண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x