IND vs SL | 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி: தொடரில் இருந்து வெளியேறும் இந்தியா?

IND vs SL | 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி: தொடரில் இருந்து வெளியேறும் இந்தியா?
Updated on
2 min read

துபாய்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடியது. இந்த போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஓவர் வரை இந்த போட்டி சென்றிருந்தது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றது. இந்திய அணி முதலில் பேட் செய்து 173 ரன்களை எடுத்தது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது.

அந்த அணிக்காக நிசாங்கா மற்றும் குசல் மெண்டீஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தவில்லை. 12-வது ஓவரில் சஹால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் மூலம் இந்திய அணி ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது.

தொடர்ந்து 14 மற்றும் 15-வது ஓவரில் அஸ்வின் மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன் மூலம் இலங்கை அணிக்கு ஆட்டத்தில் கொஞ்சம் அழுத்தம் கூடியது. பனுகா ராஜபக்சே மற்றும் தசுன் ஷானகா கிரீஸில் இருந்தனர். இருவரும் நேர்த்தியாக இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்தனர்.

இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் இலங்கை அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி கிட்டத்தட்ட ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.

முன்னதாக, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்கள் களம் இறங்கி இருந்தனர். இரண்டாவது ஓவரில் ராகுல், 6 ரன்கள் எடுத்து தீக்ஷனா சூழலில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதன் பின்னர் கேப்டன் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் 58 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தனர். ரோகித் 72 ரன்களிலும், சூர்யகுமார் 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன் பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 17 ரன்களில் வெளியேறினார். ஹூடா 3 ரன்களிலும், பந்த் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது.

இந்தியா ஃபைனலுக்கு முன்னேறுமா?

சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதே போல பாகிஸ்தான் அணி அடுத்ததாக விளையாட உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவ வேண்டும். அப்போது தான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in