

துபாய்: ஒருமுறை என் மரணம் பற்றிய வதந்தி பரவியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். அவரின் உதவியுடன் கடைசி ஓவரில் பாண்டியா அபாரமான சிக்ஸ் அடித்து வெற்றிபெற வைத்தார். இந்திய அணி அடுத்ததாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜடேஜாவிடம், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையை இழக்கக்கூடும் என்று செய்திகள் பரவிவருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “உலகக் கோப்பை அணியில் நான் இல்லை என்று இது மிகச் சிறிய வதந்தி. ஒருமுறை என் மரணம் குறித்த வதந்தி பரவியது. அப்படிப்பட்ட வதந்திகளை உங்களால் பொருத்த கொள்ள முடியாது. நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதிலேயே இப்போது எனது கவனம்” என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில், ஜடேஜா 118.37 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 19.33 சராசரியுடன் 116 ரன்களே எடுத்திருந்தார். அவரால் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. மேலும், விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சில மாதங்கள் போட்டிகளை தவறவிட்டார். காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால், விரைவாகவே குணமடைந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்றத்துடன் எட்ஜ்பாஸ்டன் மைதான டெஸ்டில் சதம் அடித்து தன்னை நிரூபித்தார். நேற்றுமுன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியாவுடன் 52 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.