Published : 28 Aug 2022 11:50 PM
Last Updated : 28 Aug 2022 11:50 PM

IND vs PAK | ஜடேஜா - பாண்டியா வெற்றிக் கூட்டணியால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் கூட்டணி வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் இன்னிங்ஸை தொடங்கினார். பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர் நசீம் ஷா முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ராகுலை கிளீன் போல்ட் செய்தார். அதனால் ரன் ஏதும் எடுக்காமல் ராகுல் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ரோகித் மற்றும் கோலி இணைந்து 49 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித், 18 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் எடுத்து அவுட்டானார். கோலி, 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். பின்னர் சூர்யகுமார் மற்றும் ஜடேஜா இணைந்து 36 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் யாதவ், 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா உடன் ஜடேஜா இணைந்து மீண்டும் பார்ட்னர்ஷிப் பில்ட் செய்தார். இருவரும் இணைந்து 52 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரின் முதல் பந்தில் 35 ரன்கள் எடுத்து ஜடேஜா அவுட்டானார். முடிவில் இந்தியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்தார் ஹர்திக். அவர் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அசத்தினார்.

முன்னதாக, பாகிஸ்தானுக்காக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். கடந்த முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்த போது அவர்கள் இருவரும் 152 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதை இந்த போட்டியிலும் தொடர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் 10 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார் பாபர். ஃபகார் ஜமான் 10 ரன்கள் எடுத்து ஆவேஷ் கான் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இப்திகார் அகமது மற்றும் ரிஸ்வான் ஆகியோர் 45 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணியை தகர்த்தார் ஹர்திக் பாண்டியா. இப்திகார் அகமது, 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாண்டியா வீசிய அதற்கடுத்த ஓவரில் ரிஸ்வான் மற்றும் குஷ்தில் ஷா விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ரிஸ்வான் 42 பந்துகளில் 43 ரன்களை எடுத்திருந்தார்.

தொடர்ந்து அந்த அணியின் பவர் ஹிட்டரான ஆசிஃப் அலி, 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். நவாஸ் 1 ரன்னிலும், ஷதாப் கான் 10 ரன்களிலும், நசீம் ஷா ரன் ஏதும் எடுக்காமலும், தஹானி 16 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர்.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 147 ரன்களை எடுத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x