Published : 16 Aug 2022 07:32 AM
Last Updated : 16 Aug 2022 07:32 AM

பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி விருப்பம்

லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற சி.ஏ. பவானி தேவி நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: சென்னையை சேர்ந்த சர்வதேச வாள்வீச்சு வீராங்கனையான சி.ஏ.பவானி தேவி லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் தனிநபர் சேபர் பிரிவில் தங்கப் பதக்கமும், அணிகள்பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். பதக்கம் வென்ற பவானி தேவி நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பவானி தேவி நிருபர்களிடம் கூறும்போது, “காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக கடுமையாக போராட வேண்டும். கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏராளமான போட்டிகளில் பங்கேற்று தகுதி பெற வேண்டும். இதற்கான தகுதிப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுமானால் 12 தகுதிப் போட்டிகளில் விளையாட வேண்டும். இந்தியாவில் வாள்வீச்சு விளையாட்டு பிரபலமாகி வருகிறது. மகளிருக்காக தனியாக லீக் போட்டிகள் சமீபத்தில் டெல்லியில் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோன்று சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற உலக கோப்பை வாள்வீச்சில் இந்திய அணிக்காக சேபர் பிரிவில் மட்டும் 12 பேர் பங்கேற்றது பெரிய விஷயம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x