Published : 14 Aug 2022 10:58 PM
Last Updated : 14 Aug 2022 10:58 PM

20 பவுண்டரி, 6 சிக்ஸர்: அதிரடியில் மிரட்டும் புஜாரா | அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசல்

சசெக்ஸ்: இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல்-தர கவுன்டி கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடரில் சசெக்ஸ் அணிக்காக அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் மிகவும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் இருக்கும். களத்தில் சாலிடாக (Solid) நிலைத்து நின்று ஆடும் பேட்ஸ்மேனாக இவர் அறியப்படுகிறார்.

இந்த சூழலில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்த தொடரில் மொத்தம் 18 அணிகள் இரண்டு பிரிவுகளாக விளையாடி வருகின்றன. இதில் சசெக்ஸ் அணி ‘ஏ’ பிரிவில் விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இன்று (ஆகஸ்ட் 14) Surrey அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 131 பந்துகளில் 174 ரன்களை விளாசியுள்ளார் புஜாரா. 20 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கடந்த 12-ம் தேதி நடைபெற்ற Warwickshire அணிக்கு எதிரான போட்டியில் 79 பந்துகளில் 107 ரன்கள் விளாசி இருந்தார்.

அந்த அணியின் கேப்டனாகவும் புஜாரா செயல்பட்டு வருகிறார். அவரது இந்த அதிரடி ஃபார்ம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அணிக்காக மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே புஜாரா விளையாடி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x