

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் இந்த தொடருக்கான அணியை கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவித்தது பிசிசிஐ. அப்போது தவான் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை கே.எல்.ராகுல் மிஸ் செய்திருந்தார். இப்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அவர் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுகிறார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான கேப்டனாக அவரை தேர்வுக் குழு நியமித்துள்ளது.
முன்னதாக, ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். கரோனா தொற்றுக்கு முன்னதாக காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடைசியாக அவர் கடந்த பிப்ரவரியில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி விவரம்…
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.