Published : 11 Aug 2022 07:45 PM
Last Updated : 11 Aug 2022 07:45 PM

‘நியூஸிலாந்து கிரிக்கெட்டில் இனவெறி பேதத்திற்கு ஆளானேன்’ - சுயசரிதையில் ராஸ் டெய்லர் பகிரங்கம்

கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் நியூஸிலாந்து அணியின் வீரர் ராஸ் டெய்லர். இந்நிலையில், அவர் எழுதியுள்ள சுயசரிதையில் நியூஸிலாந்து கிரிக்கெட்டில் தான் இனவெறி பேதத்திற்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த அணியின் ஆகச் சிறந்த வீரர்களில் ஒருவர் ராஸ் டெய்லர். 38 வயதான அவர் கடந்த 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் என்ட்ரி கொடுத்தவர். 16 ஆண்டு காலம் கிரிக்கெட் களத்தில் தன் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 மூன்று கிரிக்கெட் ஃபார்மெட்டுகளிலும் நியூஸிலாந்து அணிக்காக மொத்தம் 450 போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று ஃபார்மெட்டுகளையும் சேர்த்து 18,199 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் ஓர் அங்கமாக இருந்தவர்.

இந்நிலையில், அவர் தெரிவித்துள்ள இனவெறி பேதம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை தனது சுயசரிதை புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

“டிரெஸ்ஸிங் ரூமில் சில நேரங்களில் சக வீரர்களுக்கு இடையேயான கேலிப் பேச்சு கொஞ்சம் இனவெறி பேதத்தை சார்ந்து இருக்கும். அது புண்படுத்தும் வகையிலும் இருக்கும். ஆனால் அதனை பெரிது படுத்துவது அந்தச் சூழலை மேலும் மோசமடைய செய்யும் என அதனை கடந்து வந்தவன் நான்.

நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டு வெள்ளையர்களை சார்ந்தது போல இருக்கும். எனது விளையாட்டு வாழ்க்கையில் பெரும்பகுதி நான் வெண்ணிலா லைன் அப்பில் நான் ஒரு பிரவுன் முகமாகவே பார்க்கப்பட்டேன்.

நான் ‘பாதி நல்லவன்’ என எனது சக வீரர் ஒருவர் சொல்வது வழக்கம். அவர் அப்படி சொல்வதன் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு புரியாமல் போகலாம். எனக்கு தெரியும். இந்த மாதிரியான இரட்டை அர்த்தம் கொண்ட இனவெறி சார்ந்த கமெண்டுகளை அவர்கள் வெறும் கேலிப் பேச்சாகவே பார்த்ததும் உண்டு” என டெய்லர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x