Published : 05 Aug 2022 03:42 PM
Last Updated : 05 Aug 2022 03:42 PM

ஆசிய கோப்பை: 3 முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்குநேர் பலப்பரீட்சை செய்ய வாய்ப்பு

விரைவில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் தலா மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடரை நடைபெறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. ஆறாவது அணிக்கான தகுதி சுற்றில் தேர்ச்சி பெறும் அணி இந்தத் தொடரில் விளையாடும். இந்த தொடர் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதி பெறும் அணியும் குரூப் ‘ஏ’ சுற்று போட்டியில் விளையாடுகின்றன. இதில் குரூப் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி விளையாடுகின்றன. அது முடிந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றில் விளையாட வேண்டும்.

நான்கு அணிகள் விளையாடும் இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் விளையாட வேண்டும்.

அதே போல் இரு அணிகளும் குரூப் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும். வெறும் 15 நாட்கள் இடைவெளியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு அமைந்துள்ள காரணத்தால் இதனை இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய அணி அறிவிக்கப்படும். கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x