Published : 03 Oct 2016 05:27 PM
Last Updated : 03 Oct 2016 05:27 PM

நியூஸி.க்கு எதிரான தொடரை வென்று நம்பர் 1 ஆனது இந்தியா!

கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்திய அணி.

இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 4-ம் நாள் காலையில் 263 ரன்களுக்குச் சுருண்டது. போல்ட், ஹென்றி, சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து 376 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து 115/2 என்று பிறகு தேநீர் இடைவேளையின் போது 135/3 என்றும் இருந்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கெட்டுகளை மடமடவென இழந்து 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியதோடு தொடரையும் இழந்தது. இந்திய அணித் தரப்பில் அஸ்வின், ஜடேஜா, மொகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலக்கைத் துரத்தும் போது நியூஸிலாந்து தொடக்க வீரர்கள் நிதானமாகவும் வலுவாகவும் ஆடினர். லேதம், கப்தில் இணைந்து 55 ரன்களைச் சேர்த்தனர். கப்தில் நல்ல இன்னிங்சிற்கு அடித்தளமாக 49 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். ஆனால் இவருக்கு மொகமது ஷமி பந்தில் பிளம்ப் எல்.பி. மறுக்கப்பட்டது. இந்திய அணியினர் கடும் ஏமாற்றமடைந்தனர். அஸ்வின் பந்திலும் டாம் லேதமுக்கு ஒரு பயங்கரமான முறையீடு எழுந்தது, ஆனால் இவையெல்லாம் நடுவரின் அழைப்புகள் எனவே இதில் பெரிதாகக் குறை காண எதுவுமில்லை. மறுக்கப்பட்ட எல்.பி.க்களை பற்றி கேப்டன் கோலி எரிச்சலடைந்தாலும், இந்த டெஸ்ட் போட்டியில் 15 எல்.பி.க்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பாக கொடுக்கப்பட்டது 8 எல்.பி.க்கள்!!

ஆனால் இன்னொன்று என்னவெனில் மொத்தம் 40 விக்கெட்டுகளில் 26 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எனவே குழிபிட்ச் ஸ்பின் பிட்ச் என்ற குறைபாட்டிற்கு இடமில்லை.

நல்ல தொடக்கத்திலிருந்து சரிவடைந்த நியூஸிலாந்து:

103/1 என்ற நிலையிலிருந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட் என்பது நியூஸிலாந்தின் அயராத போராட்டக்குணத்தை அறிவுறுத்தாது, ஆனால் அவர்கள் உண்மையில் போராடினர்.

குறிப்பாக லேதம் 148 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தது சதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு இன்னிங்ஸ். காரணம் அஸ்வினின் ஆஃப் ஸ்பின்னர்களையும் நேர் பந்துகளையும் திறம்பட கணித்து சிறந்த உத்தியுடன் அடினார். ஸ்வீப் ஷாட்களை திறம்பட பயன்படுத்தினார்.

முதல் விக்கெட் இன்னிங்சின் 17-வது ஓவரில் அஸ்வின் மூலம் கிடைத்தது. மார்டின் கப்திலுக்கு (24) ஃபுல் லெந்த் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று வெளியே பிட்ச் ஆகி உள்ளே வந்தது. எல்.பி தீர்ப்பளிக்கப்பட்டது. ஹென்றி நிகோல்ஸ் 66 பந்துகள் இந்தியப் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஸ்கோர் 104ஆக இருந்த போது ஜடேஜாவின் பந்தில் எட்ஜ் செய்து ரஹானேயிடம் பிடி கொடுத்தார். இதன் பிறகு படபட விக்கெட்டுகள்.

அஸ்வின் 22 ஓவர்களைத் தொடர்ந்து ஒருமுனையில் வீசினார், இதன் பலனாக ராஸ் டெய்லர் அஸ்வினின் அபாரமான உள்ளே வந்து வெளியே டிரிஃப்ட் ஆன பந்தில் பிளம்ப் எல்.பியானார். டெய்லரின் மட்டை கல்லியிலிருந்து மிட் ஆன் நோக்கி வந்தது, இது தவறான உத்தி. ஆனால் அவர் இப்படித்தான் தொடர்ந்து ஆடி வருகிறார், இப்படிப்பட்ட உத்தியில் அஸ்வினின் இந்தப் பந்தை ஆடுவது கடினம்.

அருமையாக ஆடி வந்த லேதம் 74 ரன்களில் அடுத்ததாக சற்றே வைடாக வீசிய பந்தை டிரைவ் ஆடி எட்ஜ் செய்து சஹாவிடம் கேட்ச் கொடுத்தார். இடையில் லுக் ரோங்கி 2 பவுண்டரிகள் அடித்து 15 ரன்கள் வந்தார். ஆனால் சாண்ட்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசி உள்ளே கொண்டு வந்த பந்தில் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

வாட்லிங்கிற்கு ஷமி அருமையான ரிவர்ஸ் ஸ்விங்கை வீசி பவுல்டு செய்தார். அடுத்ததாக 32 ரன்களுடன் நன்றாக ஆடி வந்த ரோங்கி ஜடேஜாவின் வேகமான பந்தை தடுக்கும் முயற்சியில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். படேலை புவனேஷ் குமார் பவுல்டு செய்தார். மேட் ஹென்றி 18 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தை கவர் திசையில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். டிரெண்ட் போல்ட், ஷமியின் பவுன்சரை ஆக்ரோஷமாக அடிக்க முயன்றார் ஆனால் பந்து மேலே எழும்ப முதல் ஸ்லிப்பில் இருந்த விஜய் பின்னால் சென்று கேட்ச் செய்ய நியூஸிலாந்து 81.1 ஓவர்களில் காலியானது. இந்தியா நம்பர் 1 நிலைக்கு முன்னேறியது.

ஆட்ட நாயகனாக விருத்திமான் சஹா தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x