

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடந்த ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா தங்கப் பதக்கம் வென்றார்.
சரித்திரம் படைக்கும் இளைஞர் சக்தி: பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற ஜெரமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நமது இளைஞர் சக்தி சரித்திரம் படைத்துள்ளது. ஜெரமி லால்ரினுங்காவுக்கு வாழ்த்துகள். காமென்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று வரலாற்று சாதனையும் படைத்துள்ளார். மிகச் சிறிய வயதில் அவர் தேசத்துக்கு பெருமையும், மகிமையும் சேர்த்துள்ளார். அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
பதக்கம் குவிக்கும் பளுதூக்குதல் வீரர்கள், வீராங்கனைகள்: முன்னதாக, பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மொத்தம் 198 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
தொடர்ந்து ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
அடுத்தபடியாக 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதேபோல் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி பிந்தியாராணி தேவி சொரோகைபம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தற்போது, ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரின்னுங்கா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டு தங்கங்களைப் பெற்றுள்ளது.