Published : 28 Jul 2022 04:11 PM
Last Updated : 28 Jul 2022 04:11 PM

செஸ் ஒலிம்பியாட் 2022 | தங்கம் வெல்ல இதுவே சிறந்த தருணம்

1924-ல் பிரான்ஸ் நாட்டில் 8-வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடந்த நேரத்தில் பாரிஸில் முதல் ‘செஸ் ஒலிம்பிக் போட்டிகள்’ நடத்தப்பட்டுஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு, விளையாட்டில் மிகவும் மதிப்புமிக்க அணி சாம்பியன்ஷிப்பான செஸ் ஒலிம்பியாட்டை இந்தியா நடத்துகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியானது 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசியாவில் தற்போது நடத்தப்படுகிறது. கடைசியாக 1992-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தில் நடத்தப்பட்டது.

1927-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக செஸ் ஒலிம்பியாட் தொடங்கப்பட்டது, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் சென்ட்ரல் ஹாலில் நடைபெற்ற இந்தத் தொடரில் 16 நாடுகளைச் சேர்ந்த 70 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா 1956-ல் மாஸ்கோவில் நடைபெற்ற தொடரில்தான் முதன் முறையாக பங்கேற்றது. 34 பேர் பங்கேற்ற நிலையில் இந்தியா 27 வது இடத்தைப் பிடித்தது.

அந்தத் தொடரில் இந்தியா சார்பில் ஆர்.பி.சப்ரே, ராம்தாஸ் குப்தா, பி.பி. மைஸ்கர், எஸ்.வெங்கட்ராமன்ஆகியோர் அடங்கிய இந்திய அணி 17 ஆட்டங்களில் ஏழு வெற்றிகளையும், நான்கு டிராவையும், ஆறு தோல்விகளையும் பெற்றது. இந்த சாதாரண அறிமுகத்திற்குப் பிறகு, இந்தியா அடுத்த தொடரை தவறவிட்டது. அடுத்த மூன்று தொடர்களிலும் 24 (1960-ம் ஆண்டு), 28 (1962-ம் ஆண்டு) மற்றும் 37 (1964-ம் ஆண்டு) இடங்களை பிடித்தது. 1966 முதல் 1978 வரை பல காரணங்களால் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை.

இதன் பின்னர் 1980 முதல் தொடர்ச்சியாக அனைத்து தொடர்களிலும் இந்தியா பங்கேற்றது. 2014-ல் நார்வே நாட்டின் டிராம்ஸோவில் நடைபெற்ற தொடரில் பரிமார்ஜன் நேகி, எஸ்.பி. சேதுராமன், கே.சசி கிரண், பி.அதிபன், எம்.ஆர்.லலித் பாபு ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.1978-ல் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற 8-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியா அறிமுகமானது.

இதன் பின்னர் அடுத்தடுத்த தொடர்களில் இந்திய மகளிர் அணி பங்கேற்றது. டி.ஹரிகா, ஈஷா கரவாடே, தானியா சச்தேவ், மேரி அன் கோம்ஸ், சவுமியா சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட இந்திய மகளிர் அணி 2012-ம் ஆண்டு இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற தொடரில் 4-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டிருந்தது.

இதுதவிர இந்தியா சில தனிப்பட்ட செயல் திறன் கொண்டவர்களை உருவாக்கி உள்ளது. இரண்டு பிரிவுகளில் பல்வேறு போர்டுகளில் 10 பதக்கங்களை வென்றுள்ளது. திபியேந்து பருவா (1990) மற்றும் பத்மினி ரவுத் (2014) ஆகியோர் தங்களுடைய செயல் திறனுக்காக தனிப்பட்ட தங்கப் பதக்கங்களுடன் திரும்பியுள்ளனர். 2000 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் தனது சிறந்த போர்டு செயல் திறனுக்காக எஸ்.விஜயலட்சுமி இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.

கடந்த சில பதிப்புகளில், இந்திய சதுரங்கத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, ஒலிம்பியாட்களில் செயல்திறன்கள் சீராக உள்ளன. இரண்டு பிரிவுகளிலும் இந்தியா பதக்க வேட்டையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஆனால், 2014-ம் ஆண்டைத் தவிர, இந்தியாவினால் பதக்கப் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் இந்தியாவிற்கு இரு பிரிவுகளிலும் பதக்கம் வெல்ல சிறந்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அதற்கு ஏற்றவாறு இந்திய அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் சமீபத்திய பார்ம் சிறப்பாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவது கூடுதல் பலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x