

ஒருநாள் போட்டிகளை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக ஏன் குறைக்க கூடாது என கேட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அண்மைய நாட்களாக ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் டி20 லீக் தொடர்களின் வளர்ச்சி சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் வரவாக இணைந்துள்ளார் ரவி சாஸ்திரி.
“ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாக மாற்றுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒருநாள் கிரிக்கெட்டின் பயணம் 60 ஓவர்களாக தொடங்கியது. 1983-இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது விளையாடிய ஓவர்களின் எண்ணிக்கை 60. அப்போது ஓவர்களின் எண்ணிக்கை நீண்டு இருப்பதாக எண்ணியதால்தான் அது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இப்போது 20 முதல் 40 ஓவர்கள் வரையிலான போட்டியை ஜீரணிக்க மிகவும் கடினமானதாக பார்க்கப்படுகிறது. அதனால் பழைய பாணியில் 50 ஓவர்களை 40 ஓவர்கள் என குறைக்கலாம். நாம் முன்னோக்கி சிந்திப்பது அவசியம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷஹித் அஃப்ரிடியும் இதை சொல்லி இருந்தார். “ஒருநாள் கிரிக்கெட் போர் அடிக்கிறது. 50 ஓவர்களை 40 என குறைக்கலாம். இது எனது பரிந்துரை” என அவர் சொல்லியிருந்தார்.