Last Updated : 30 May, 2016 09:32 AM

 

Published : 30 May 2016 09:32 AM
Last Updated : 30 May 2016 09:32 AM

ஒலிம்பிக் போட்டிக்கு சீமா புனியா தகுதிபெற்றார்

ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறியும் பிரிவில் கலந்துகொள்ள இந்திய வீராங்கனை சீமா புனியா தகுதி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சாலினாஸ் நகரில் நேற்று யங் துரோவர்ஸ் கிளாசிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் வட்டு எறியும் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை சீமா புனியா 62.62 மீட்டர் தூரத்துக்கு வட்டை எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவும் தகுதி பெற்றார். (ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெறவேண்டுமானால் ஒருவர் 61 மீட்டர் தூரத்துக்கு வட்டை எறியவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது). இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனையான ஸ்டெபானி பிரவுன் 60.50 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

2004 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றிருந்த சீமா புனியா, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார். 2014-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அவர், அப்போட்டியில் 60.3 மீட்டர் தூரம் வட்டை எறிந்தார். 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 61.61 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். தற்போது சீமா புனியா மத்திய விளையாட்டுத் துறையின் உதவியுடன் அமெரிக்காவில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து நிருபர்களிடம் கூறிய சீமா புனியா, “ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டி எனக்கு மிகச்சிறந்த ஒலிம்பிக் போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x