Published : 11 Apr 2014 12:25 PM
Last Updated : 11 Apr 2014 12:25 PM

டெஸ்ட் தகுதியைப் பெற சிறப்பு கிரிக்கெட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற சிறிய அணிகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டி நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இப்போது 8 அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நிரந்தரமான தகுதியை பெற்றுள்ளன. வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து போராடி வருகின்றன.

ஐசிசி-யின் இப்போதைய புதிய முடிவால் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும் டெஸ்ட் போட்டிக்கான தகுதியைப் பெற வாய்ப்பு கிடைக்கும். டெஸ்ட் போட்டி தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் டெஸ்ட் தகுதிக்கான போட்டியில் பங்கேற்கும். டெஸ்ட் தகுதி போட்டிக்கு ஐசிசி டெஸ்ட் சேலஞ்ச் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த போட்டி மூலம் ஐசிசி-யில் உறுப்பினராக உள்ள பல நாடுகள் பயனடையும் என்று ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளுக்கான திட்டமிடுதல், நிதி நிர்வாகம் செயல்பாடுகள் குறித்து பல முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. சமீபத்தில் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிந்த வங்கதேச கிரிக்கெட் சங்கத்துக்கு ஐசிசி கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் இதே முறைப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐசிசி-யின் அடுத்த கூட்டத்தை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்தியா சார்பில் என்.சீனிவாசன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x