Published : 05 Jul 2022 11:50 PM
Last Updated : 05 Jul 2022 11:50 PM

வெற்றிக்கு பிறகு கோலி-பேர்ஸ்டோ போட்டோவை பகிர்ந்து வஞ்சப்புகழ்ச்சி செய்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பாஸ்டன்: ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வென்ற பிறகு கோலி-பேர்ஸ்டோ போட்டோவை பகிர்ந்து வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நிர்வாகம்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் விளையாடிய எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற டெஸ்ட் தொடர் 2 - 2 என சமனில் முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்த போது அந்த அணி வீரர் பேர்ஸ்டோவிடம் காரசாரமான வார்த்தை போரில் (ஸ்லெட்ஜிங்) ஈடுபட்டார் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி. நியூசிலாந்து அணி வீரர் சவுதி பந்துவீச்சை ஒப்பிட்டு பேர்ஸ்டோவை வம்புக்கு இழுத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அமைதியாக பேட் செய்யும் படியும் சொல்லி இருந்தார். அந்த தருணம் ஆட்டத்தில் அனல் பறந்தது. அப்போது 61 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 13 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார் பேர்ஸ்டோ. ஸ்லெட்ஜிங்கிற்கு பிறகு பேர்ஸ்டோ சதம் அடித்து அசத்தினார். இறுதியில் பேர்ஸ்டோவை கேட்ச் பிடித்து வெளியேற்றியது கோலி தான்.

கோலியின் ஸ்லெட்ஜிங்கை முன்னாள் வீரர் சேவாக் விமர்சனம் செய்திருந்தார். "கோலி, பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜ் செய்வதற்கு முன்னர் அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 21 தான். ஆனால் அதன் பிறகு அவரது ஸ்ட்ரைக் ரேட் 150. புஜாரா போல விளையாடி வந்த பேர்ஸ்டோவை தேவையில்லாமல் ஸ்லெட்ஜ் செய்து ரிஷப பந்த் போல மாற்றினார் விராட் கோலி" என சேவாக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு கோலியை வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் கோலி-பேர்ஸ்டோ ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட புகைப்படத்தையும், போட்டி முடிந்த பிறகு இருவரும் பரஸ்பரம் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தையும், கிண்டலாக ஸ்மைலி பதிவிட்டுள்ளது. இதற்கு இந்திய ரசிகர்கள் கடுமையான எதிர்வினைகளை ஆற்றிவருகின்றனர். இதனால் அந்த போஸ்ட் வைரலாகி வருகிறது.

முன்னதாக, பேர்ஸ்டோ ஸ்லெட்ஜிங் சம்பவத்தை விவரித்து, "நாங்கள் விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட். இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான் எங்களது நோக்கம். இருவருக்குமே அவரவர் சார்ந்த அணியினை வெற்றிக் கோட்டை கடக்க செய்ய வேண்டுமென்பது தான் விருப்பம். இதெல்லாம் அதன் ஒரு பகுதி. இது அந்த ஆட்டத்துடன் மூட்டை கட்டி வைக்கப்படும்" என பாசிட்டிவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x