ஆசிய கைப்பந்து போட்டி இந்திய அணியில் இடம்பிடித்த ஓசூர் அரசுப் பள்ளி மாணவி
ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விளையாட ஓசூர் அரசுப்பள்ளி மாணவி ஜி.கோபிகா தேர்வு பெற்றுள்ளார்.
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிப்பவர் மாணவி ஜி.கோபிகா. கைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இவர், ஓசூரில் உள்ள ஈகிள்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து கைப்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வந்தார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று திறமையாக விளையாடி வந்தார். கைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி கோபிகா, நாளை (4-ம் தேதி) முதல் 11-ம் தேதி வரை கஜகஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள 21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய கைப்பந்து அணியில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து மாணவி கோபிகா கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஜுன் 30-ம் தேதி வரை இரண்டு மாதங்களாக ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கைப்பந்து அணியில் இணைந்து பயிற்சி பெற்று வந்தார்.
தற்போது பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்திய கைப்பந்து அணியில் இணைந்து கஜகஸ்தான் நாட்டுக்கு கடந்த 1-ம் தேதி புறப்பட்டுச் சென்றார். இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்து ஓசூருக்கு பெருமை சேர்த்துள்ள மாணவி கோபிகாவை தலைமையாசிரியர் லதா, மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி, கைப்பந்து பயிற்சியாளர்கள் தாயுமானவர், மாணிக்கவாசகன் ஆகியோர் பாராட்டினர்.
