

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா.
226 ரன்கள் டார்கெட்டை துரத்திய அயர்லாந்து அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. பவுல் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்ன் இருவரும் ஓப்பனிங் இறங்கினர். இந்திய அணி சார்பில் முதல் ஓவரை வழக்கம் போல் புவனேஷ்வர் குமார் தொடங்கினார். அயர்லாந்து அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற ஸ்டிர்லிங் அந்த ஓவரை எதிர்கொண்டார். சந்தித்த முதல் ஆறு பந்துகளில் ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து அதிரடியாக ரன் வேட்டையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இரண்டாவது ஓவரிலும் ஒரு சிக்ஸர், மூன்றாவது மற்றும் நான்காவது ஓவரிலும் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என அதிரடி காட்டினார் ஒப்பனர்கள் இருவரும். இவர்களால் முதல் 5 ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் என்ற நிலையை எட்டியது. ரவி பிஷ்னோய் வந்து இந்தக் கூட்டணியை பிரித்தார். ஸ்டிர்லிங் 17 பந்துகள் சந்தித்து 40 ரன்கள் சேர்த்திருந்தபோது முதல் விக்கெட்டாக நடையைக் கட்டினார்.
ஸ்டிர்லிங் சென்றாலும், கடந்த போட்டியில் தனி வீரராக போராடிய ஹேரி டெக்டருடன் இணைந்து ஆண்ட்ரூ பால்பிர்ன் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து சில ஓவர்கள் அதிரடி காட்டி ரன் ரேட்டை குறையவிடாமல் பார்த்துக்கொண்டனர். பால்பிர்ன் அரைசதம் கடந்து 60 ரன்கள் எடுத்த போது அவரை அவுட் ஆக்கினார் ஹர்ஷல் படேல். அதேநேரம், இந்தப் போட்டியிலும் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி பயம் காட்டினார் ஹேரி டெக்டர்.
28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த அவரை, புவனேஷ்வர் குமார் வெளியேற்ற நிம்மதி ஏற்பட்டது. அந்த நிம்மதியை சிறிதுநேரம்கூட நிலைக்கவிடவில்லை அயர்லாந்தின் மற்றொரு பேட்ஸ்மேன் ஜார்ஜ் டோக்ரெல். கடைசி ஓவர்களில் இவர் இந்திய பவுலர்களை பயம்காட்டினார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இதில் முதல் ஐந்து பந்துகளில் ஜார்ஜ் டோக்ரெல் மற்றும் மார்க் அடைர் இருவரும் இணைந்து 11 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. எனினும் உம்ரான் மாலிக் திறம்பட பந்துவீசி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்த அயர்லாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது இந்தியா. இந்திய தரப்பில்
இந்தியா இன்னிங்ஸ்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஓப்பனிங் இணையாக இம்முறையும் இஷான் கிஷனுடன், சஞ்சு சாம்சன் களம் கண்டார். இப்போட்டியில் 3வது ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணி முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. மார்க் அடைர் பந்தில் 3 ரன்களே எடுத்திருந்த இஷான் கிஷன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒன் டவுனாக தீபக் ஹூடா களம் இறங்கினார். இருவரும் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.
அயர்லாந்து பவுலர்கள் எவ்வளவு முயன்றும், இவர்களை பிரிக்க முடியவில்லை. சஞ்சு சாம்சன், 31 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ய, மறுபுறம் அவருக்கு முன்னதாக தீபக் ஹூடா அரைசதம் கடந்தார். 3வது ஓவரில் இணைந்த இவர்கள் கூட்டணியை மார்க் அடைர் வந்தே பிரித்தார். அதுவும் 16.2 ஓவரில். அரைசதம் கடந்து 77 ரன்களை எடுத்திருந்த சஞ்சு சாம்சன் அடைரின் ஸ்லோ யார்க்கரில் போல்டாகினார்.
அதேநேரம் நிலைத்து ஆடிய தீபக் ஹூடா சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 55 டெலிவரிகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் விளாசி தனது முதல் சதத்தை எடுத்திருந்தார். இறுதி ஓவர் வரை நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18-வது ஓவரின் இறுதி பந்தில் 104 ரன்களுக்கு அவுட் ஆகினார். இதன்பின் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், லிட்டில் மற்றும் யங் தலா இரண்டு விக்கெட்டும் எடுத்தனர்.