Published : 28 Jun 2022 06:04 AM
Last Updated : 28 Jun 2022 06:04 AM

அயர்லாந்துடன் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகள் 2-வது டி 20 ஆட்டத்தில் டப்ளின் நகரில் உள்ள மலாஹைட் மைதானத்தில் இன்று இரவு 9 மணிக்கு மோதுகின்றன.

இரு அணிகள் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டம் மழை காரணமாக 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த அயர்லாந்து 12 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 108 ரன்கள் குவித்தது.

ஒரு கட்டத்தில் அந்த அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் ஹாரி டெக்டர் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாசி அசத்தினார். லார்கன் டக்கர் 18 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் யுவேந்திர சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். புவனேஷ்வர், ஹர்திக் பாண்டியா, அவேஷ் கான் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

109 ரன்கள் இலக்குடன் பேட்செய்த இந்திய அணி 9.2 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய தீபக் ஹூடா 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் 11 பந்துகளில் 26 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 24 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

ஆட்ட நாயகனாக சாஹல் தேர்வானார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று அதே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை 2-0 என வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x