இந்தியா - அயர்லாந்து அணி முதல் டி 20-ல் இன்று மோதல்

இந்தியா - அயர்லாந்து அணி முதல் டி 20-ல் இன்று மோதல்
Updated on
1 min read

டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 9 மணி அளவில் டப்ளின் நகரில் நடைபெறுகிறது. ரிஷப் பந்த், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளதால் அயர்லாந்து தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளார்.

அதேபோன்று இந்தத் தொடருக்கு விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். காயத்தில் இருந்து மீண்டுள்ள சூர்யகுமார் யாதவ் 3 அல்லது 4-வது இடத்தில் களமிறங்கக்கூடும். சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யக்கூடும். அதேவேளையில் நெருக்கடியுடன் களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.

அயர்லாந்து தொடரானது அடுத்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை ஆகியவற்றுக்கான சிறந்த வீரர்கள் குழுவை கண்டறியும் வாய்ப்பாக இந்திய அணிக்கு அமைந்துள்ளது. அயர்லாந்து ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

அயர்லாந்து அணியை பொறுத்தவரையில் வலிமைமிக்க இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடர் உலக கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. அந்த அணி ஆண்ட்ரூ பால்பிர்னி தலைமையில் களமிறங்குகிறது. இந்தத் தொடர் சோனி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in