Published : 23 Jun 2022 06:32 AM
Last Updated : 23 Jun 2022 06:32 AM

புட்சால் கால்பந்து தொடரில் சென்னைக்கு 2-வது இடம்

சென்னை: இந்திய புட்சால் சங்கம் சார்பில் தேசிய அளவிலான புட்சால் கால்பந்து தொடர் சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்றது.

இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் சென்னை அணி 2-வது இடம் பிடித்தது. 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் சென்னை அணி லீக் சுற்றில் மேற்கு மகாராஷ்டிரா, தெலங்கானா, மும்பை அணிகளை தோற்கடித்திருந்தது.

நாக் அவுட் சுற்றில் டை பிரேக்கரில் 3-2 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவையும், மும்பை அணியை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 3-4 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தது. சென்னை அணிக்கு கவிராஜ், இளந்தமிழன் ஆகியார் பயிற்சியாளர்களாக செயல்பட்டிருந்தனர்.

2-வது இடம் பிடித்த சென்னை அணியில் இருந்து திலிராஜ், லியோனார்டோ, சித்திக், விபிஷ், பிரபஞ்சன், சாகர் ஆகிய 6 வீரர்கள் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான புட்சால் உலகக் கோப்பை இந்திய அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான புட்சால் உலகக் கோப்பை தொடரானது வரும் நவம்பர் மாதம் சிலி நாட்டில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x