Published : 19 Jun 2022 05:42 AM
Last Updated : 19 Jun 2022 05:42 AM

கடைசி ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் - டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

பெங்களூரு: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து 0-2 என பின்தங்கியிருந்த போதிலும் அதன் பின்னர் மீண்டெழுந்து அடுத்த இரு போட்டிகளிலும் பதிலடி கொடுத்து தொடரை 2-2 என்ற சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் கடைசி ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு நடைபெறுகிறது.

ராஜ்கோட், விசாகப்பட்டினத் தில் நடைபெற்ற கடைசி இரு ஆட்டங்களிலும் இந்திய அணி பந்து வீச்சில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியிருந்தது. வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் படேல் நெருக்கடி அளித்தனர். 4-வது ஆட்டத்தில் அவேஷ் கான் அற்புதமாக செயல்பட்டு 4 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல், அக்சர் படேல் கூட்டணியும் சவால் அளித்து வருகிறது. மட்டை வீச்சில் கடந்த இரு ஆட்டத்திலும் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அபாரமாக செயல்பட்டனர். அதேவேளையில் ஸ்ரேயஸ் ஐயர், கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் எளிதாக தங்களது விக்கெட்களை இழப்பது நடுவரிசை பேட்டிங்கை பலவீனப்படுத்துவதாக உள்ளது.

தொடரை வெல்லக்கூடிய முக்கியமான ஆட்டம் என்பதால் இவர்கள் இருவரும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமாவுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், இன்று களமிறங்குவது சந்தேகம்தான். முதல் இரு ஆட்டங்களிலும் மட்டை வீச்சில் ஆக்ரோஷம் காட்டிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடைசி இரு ஆட்டங்களிலும் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ளத் தவறினர். ரபாடா காயம் காரணமாக வெளியேறி உள்ளதும் அந்த அணிக்குபின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x